இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரௌண்டராக ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்றாக வெங்கடேஷ் ஐயர் உருவாக்கப்படுகிறாரா என்கிற கேள்வி அணியின் வியூகம் மூலம் எழுந்துள்ளது.
வேகப்பந்துவீச்சு ஆல்-ரௌண்டருக்கு ஹார்திக் பாண்டியாவை மட்டும் இந்திய அணி சார்ந்து இருப்பதாக விமர்சனங்கள் இருந்து வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் வெங்கடேஷ் ஐயரை சேர்க்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில், நியூசிலாந்து டி20 தொடரில் வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டார். வெங்கடேஷ் ஐயர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கக்கூடியவர்.
இதையும் படிக்க | கப்தில் அதிரடி: நியூசிலாந்து 164 ரன்கள் குவிப்பு
ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ரோஹித் சர்மாவும், கேஎல் ராகுலும் வழக்கம்போல் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். விராட் கோலி களமிறங்கும் 3-வது வரிசை இடத்திலும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கியுள்ளார்.
பாண்டியாவைப் போல பேட்டிங் ஆல்-ரௌண்டராக இருக்கும் வெங்கடேஷ் ஐயரை பின்வரிசையில் களமிறக்கி அனைவரும் எதிர்பார்த்தைத்போல பாண்டியாவுக்கு மாற்று வீரராக அவரைத் தயாரிக்கிறதா இந்திய அணி என்கிற கேள்வி எழுந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் பாண்டியா பேட்டிங் ஆல்-ரௌண்டராக சேர்க்கப்பட்ட போதிலும் முதல் பகுதி ஆட்டங்களில் அவர் பந்துவீசவில்லை. எனவே, 6-வது பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணி திணறி வந்தது. இதுபோன்ற சூழல்களைத் தவிர்க்கவே வெங்கடேஷ் ஐயரைப் போன்ற மாற்று வீரரை உருவாக்குவது இந்திய அணியின் வியூகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.