குவாதலஜரா: டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஸா - எஸ்டோனிய வீராங்கனை ஆனெட் கோகோன்டாவிட் ஆகியோர் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இருவரும் தகுதிபெற்றிருப்பது இது முதல் முறையாகும். அதிலும், கடந்த 1993-க்குப் பிறகு டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை முகுருஸா பெற்றுள்ளார். இதற்கு முன் அந்த ஆண்டில் ஸ்பெயின் வீராங்கனை அரான்ட்ஸா சான்ஷெஸ் பட்டத்துக்கான மோதலில் ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃபிடம் தோல்வியைத்
தழுவியிருந்தார்.
மெக்ஸிகோவின் குவாதலஜரா நகரில் நடைபெறும் இப்போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதிச் சுற்றில் ஆனெட் கோன்டாவிட் 6-1, 3-6, 6-3 என்ற செட்களில் கிரீஸின் மரியா சக்காரியை தோற்கடித்தார். 2-ஆவது அரையிறுதிச் சுற்றில் கார்பின் முகுருஸா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சக நாட்டவரான பெüலா பதோசாவை வீழ்த்தினார்.
இதில் கோன்டாவிட் அடைந்திருக்கும் வெற்றி நடப்பு சீசனில் அவரது 48-ஆவது வெற்றியாகும். இதன் மூலம் இந்த சீசனில் அதிக வெற்றியை பதிவு செய்த டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியூரை எண்ணிக்கையை அவர் சமன் செய்துள்ளார்.
இதையடுத்து போட்டித் தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் முகுருஸாவும், 8-ஆம் இடத்திலிருக்கும் கோன்டாவிட்டும் வியாழக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் மோதுகின்றனர். முன்னதாக, ரவுண்ட் ராபின் சுற்றில் கோன்டாவிட்டை ஏற்கெனவே வீழ்த்தியிருக்கிறார் முகுருஸா.
இதுவரை இருவரும் 5 முறை நேருக்கு நேர் சந்தித்திருக்கும் நிலையில், முகுருஸா 3 ஆட்டங்களிலும், கோன்டாவிட் 2 ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.