டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களான விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருடன் அவர் இணைந்தார்.
இந்நிலையில் 69 கிலோ பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினா, மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். இத்தகவலை இந்தியக் குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 21 முதல் தொடங்கும் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள் என்றும் இந்தியக் குத்துச்சண்டை சம்மேளனம் கூறியுள்ளது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.