இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அற்புதமான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ரோஹித்துடன் இணைந்த சேத்தேஷ்வர் புஜாரா துரிதமாக ரன்கள் சேர்த்து இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்தார். இதனால், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியும் முன்னிலைப் பெற்றது. புஜாரா அரைசதத்தை நெருங்க ரோஹித் சதத்தை நெருங்கினார். 94 ரன்கள் எடுத்திருந்தபோது மொயீன் அலி சுழலில் சிக்ஸரைப் பறக்கவிட்ட ரோஹித் சர்மா அந்நிய மண்ணில் தனது முதல் சதத்தை எட்டினார். இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த 7 சதங்களும் இந்திய மண்ணில் அடித்தவை.
ராகுல் ஆட்டமிழந்தவுடன் தடுமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஜாராவின் பதிலடி ஆட்டத்தால் இந்திய அணியே ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்களைத் தாண்டியது. உணவு இடைவேளைக்குப் பிறகு மட்டும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் சேர்த்தது. 3-ம் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் 103 ரன்களுடனும், புஜாரா 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து விளையாடிய புஜாரா அரைசதம் கடந்து அசத்தினார்.
இருப்பினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 127 ரன்களுக்கும், புஜாரா 61 ரன்களுக்கும் ராபின்சன்னின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் களம் கண்ட விராத் கோலி, ஜடேஜா இருவரும் மேலும் விக்கெட்டை பறிகொடுக்காமல் தடுப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதனால் இந்திய அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 92 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புகளுக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோலி 22, ஜடேஜா 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதன்மூலம் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.