டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர்களான அஸ்வினும் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றார்கள். கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தோனி - ரவி சாஸ்திரி இடையே மோதல் இருக்கக் கூடாது என முன்னாள் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தோனியின் தலைமையில் இந்திய அணி இரு உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் இந்த முடிவு இந்திய அணிக்குப் பலனளிக்கும். 2004-ல் நான் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டேன். அப்போது பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட் சிறிது பதற்றத்துடன் இருந்தார். அவருடைய இடத்தை நான் பறித்துக்கொள்வேன் என நினைத்திருக்கலாம். ஆனால் தோனிக்குப் பயிற்சியளிப்பதில் சிறிதளவில் மட்டுமே ஆர்வம் உள்ளது என ரவி சாஸ்திரி அறிவார்.
தோனி - ரவி சாஸ்திரி கூட்டணி நன்றாக அமைந்தால் அது இந்திய அணிக்குப் பெரிய பலமாக இருக்கும். ஆனால் அணித் தேர்விலும் திட்டங்களிலும் இருவரிடமும் கருத்து வேறுபாடுகள் தோன்றினால் அது அணியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் தோனியை ஆலோசகராக நியமித்ததே இந்திய அணிக்குப் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியதாகவே இருக்கும். அவர் நீண்ட அனுபவம் கொண்டவர். அதனால் எவ்வித மோதலும் ஏற்படக்கூடாது என நான் பிரார்த்தனை செய்கிறேன். ஆனால் தோனியும் சாஸ்திரிக்கும் ஒரே அலைவரிசை இருந்தால் அது இந்திய அணிக்கு மகத்தானதாக அமையும் என்றார்.