டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான அணிகளைப் பல்வேறு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். கடைசியாக ஜூலை 2017-ல் மேற்கிந்தியத் தீவுகளில் டி20 ஆட்டத்தில் அஸ்வின் விளையாடினார். அதன்பிறகு இந்திய அணி விளையாடிய 63 டி20 ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை.
டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வான பிறகு ட்விட்டரில் அஸ்வின் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு சுரங்கப்பாதையின் முடிவிலும் வெளிச்சம் இருக்கும். ஆனால் சுரங்கத்தில் உள்ளவர்களுக்கும் வெளிச்சத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும் மட்டுமே அதைக் காண வாய்ப்பு கிடைக்கும்.
2017: இந்த வாக்கியத்தை என்னுடைய அறைச் சுவற்றில் எழுதும் முன்பு, என்னுடைய நாட்குறிப்பில் பல லட்சம் முறை எழுதியிருப்பேன். நாம் படித்து வியக்கும் மேற்கோள்களை நாம் உள்வாங்கி அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்போது அவற்றுக்கு அதிக சக்தி உண்டு.
மகிழ்ச்சியும் நன்றியும் தான் தற்போது என்னை வெளிப்படுத்துகின்றன என்று உருக்கமாக எழுதியுள்ளார்.