தில்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான மணிமாறன் சித்தார்த் தில்லி அணியில் இடம்பெற்றுள்ளார். ஏலத்தில் அவரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது தில்லி அணி. 2021 முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் 4/20 எனச் சிறப்பாகப் பந்துவீசி தமிழக அணி கோப்பையை வெல்ல மணிமாறன் சித்தார்த் உதவினார்.
இந்நிலையில் துபையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மணிமாறன் சித்தார்த்துக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியாவைத் தேர்வு செய்துள்ளதாக தில்லி அணி தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு ஆர்சிபி அணிக்காக இரு வருடங்கள் விளையாடியுள்ளார் கெஜ்ரோலியா. ஐந்து ஐபிஎல் ஆட்டங்களில் மூன்று விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.