ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய மகளிர் அணி முதல் நாள் முதல் பகுதியின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் கோல்ட்கோஸ்டில் இன்று தொடங்கியுள்ளது. இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் இது 2-வது பகலிரவு டெஸ்ட்.
இரு நாட்டு மகளிா் அணிகளும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திக்கின்றன. கடைசியாக 2006-ல் இவ்விரு அணிகளும் டெஸ்டில் மோதியிருந்தன. அடிலெய்டில் நடைபெற்ற அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மேக்னா சிங், யாஸ்திகா பாட்டியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள்.
இந்திய அணிக்கு மந்தனாவும் ஷஃபாலி வர்மாவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தார்கள். 51 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் மந்தனா. 2013-க்குப் பிறகு மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட 39 அரை சதங்களில் குறைந்த பந்துகளில் அரை சதமெடுத்தவர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது.
25 ஓவர்கள் வரை தொடக்கக் கூட்டணி நீடித்தது. ஷஃபாலி அளித்த மூன்று கேட்சுகளை ஆஸி. வீராங்கனைகள் தவறவிட்டார்கள். ஆனால் 26-வது ஓவரின் முதல் பந்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷஃபாலி வர்மா. முதல் விக்கெட்டுக்கு மந்தனாவும் ஷஃபாலியும் 93 ரன்கள் சேர்த்தார்கள்.
முதல் நாள் முதல் பகுதியின் முடிவில் இந்திய மகளிர் அணி, 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. மந்தனா 64 ரன்களுடனும் பூனம் ராவத் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள்.