சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்திய பி அணி வீரர் ருணாக் வெற்றி பெற்ற நிலையில் பிரக்ஞானந்தா டிரா செய்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வெல்ல கடுமையான போட்டி நடைபெறுகிறது.
ஓபன் பிரிவில் தலா 17 புள்ளிகளுடன் உஸ்பெகிஸ்தான், அர்மீனியா ஆகிய அணிகள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியா பி, இந்தியா ஏ, அமெரிக்கா ஆகிய அணிகள் தலா 16 புள்ளிகளுடன் 3,4,5 இடங்களை முறையே பிடித்துள்ளன.
இன்று நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் இந்தியா பி அணி ஜெர்மனியையும் இந்தியா ஏ அணி பிரபல வீரர்களைக் கொண்ட அமெரிக்காவையும் எதிர்கொள்கின்றன. உஸ்பெகிஸ்தான் நெதர்லாந்தையும் அர்மீனியா ஸ்பெயினையும் எதிர்கொள்கின்றன.
ஜெர்மனிக்கு எதிராக விளையாடும் இந்திய பி அணி நல்ல நிலைமையில் உள்ளது. இந்திய பி வீரர் ருணாக் சத்வனி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜெர்மனி வீரர் டிடெரை 47-வது நகர்த்தலில் வீழ்த்தினார். தமிழக வீரரான பிரக்ஞானந்தா ராஸ்மஸுடனான ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் கடைசி சுற்றில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது இந்திய பி அணி.