இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைச் சமீபத்தில் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரணவ்.
செஸ் கிராண்ட்மாஸ்டராக மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையை 2021-ல் எட்டிய பிரணவ், கடந்த ஜூனில் புதாபெஸ்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் 2-ம் நிலையை எட்டினார். ரொமானியாவில் நடைபெற்ற செஸ் போட்டியை வென்ற பிரணவ், 3-ம் நிலையை அடைந்து இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றார். ரொமானியாவில் நடைபெற்ற லிம்பேடியா செஸ் போட்டியில் 9 சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனதுடன் கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியையும் அவர் பூர்த்தி செய்தார். சென்னை வேலம்மாள் பள்ளியில் பயின்று வரும் பிரணவின் பயிற்சியாளர் காமேஷ் விஸ்வேஸ்வரன்.
பிரணவ், தமிழ்நாட்டின் 27-வது செஸ் கிராண்ட்மாஸ்டர். அதாவது இந்தியாவிலுள்ள 75 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 27 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்குப் பரிசுத்தொகையை இன்று வழங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இத்துடன் சமீபத்தில் செஸ் கிராண்ட்மாஸ்டர் தகுதியை அடைந்த பிரணவுக்கும் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.