லார்ட்ஸ் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
லார்ட்ஸ் டெஸ்ட்:  தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்டுகளில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களைத் தடுமாறச் செய்தார்கள். போப் மட்டும் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். 

மழை காரணமாக முதல் நாளன்று 32 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் நோர்கியா 3 விக்கெட்டுகளும் ரபாடா 2 விக்கெட்டுகளும் யான்சென் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

இன்றும் தெ.ஆ.  பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால் இங்கிலாந்து அணி, 45 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போப் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் போல்ட் ஆனார். தெ.ஆ. பந்துவீச்சாளர்களில் ரபாடா 5 விக்கெட்டுகளும் நோர்கியா 3 விக்கெட்டுகளும் யான்சென் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

தென்னாப்பிரிக்க அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு எல்கரும் எர்வீயும் 85 ரன்கள் சேர்த்தார்கள். எர்வீ 73 ரன்களிலும் எல்கர் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். மஹாராஜ் 41 ரன்களும் மார்கோ யான்சென் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்து அணிக்குக் கூடுதல் ரன்கள் சேர்த்தார்கள். 2-ம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 77 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. 3 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 124 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நோர்கியா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிராட், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சிறிதளவு நிதானமாக ஆடினாலும் அவர்களால் நீண்ட நேரம் களத்தில் இருக்க முடியவில்லை. அலெக்ஸ் லீஸ் 35 ரன்களிலும், ஸாக் கிராலி 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அதிகரித்தது.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பார்ஸ்டோ பார்ட்னர்ஷிப் அணியை தோல்வியிலிருந்து மீட்பது போலத் தெரிந்தாலும் ஸ்டோக்ஸ் 20 ரன்களிலும், பார்ஸ்டோ 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டுவர்ட் பிராட் தனது பங்கிற்கு 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், இங்கிலாந்து அணி 149 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 12 ரன்கள் பின் தங்கி இருந்ததால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

தென்னாப்பிரிக்க அணியில் சிறப்பாக பந்து வீசிய நோர்கியா 3 விக்கெட்டுகளும், ரபாடா, கேசவ் மஹாராஜ் மற்றும் மாக்ரோ ஜான்சன் தலா இரு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com