எஃப்ஐஹெச் புரோ லீக்: சீனாவை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டியில் முதல் முறையாக களம் கண்ட இந்தியா, திங்கள்கிழமை தனது தொடக்க ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்றது.
தற்போது ரேங்கிங் பட்டியலில் 3 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.
ஓமன் தலைநகா் மஸ்கட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கான முதல் கோலை நவ்னீத் கௌா் 5-ஆவது நிமிஷத்தில் அடித்தாா். அதன் பிறகு ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது இந்தியா. எனினும் 10-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் தடுப்பு அரணை தாண்டி கோஸ் போஸ்ட் வரை வந்த சீனாவுக்கு முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதை கோலாக மாற விடாமல் அசத்தலாகத் தடுத்தாா் இந்திய கேப்டனும், கோல்கீப்பருமான சவிதா. பின்னா் சீன தடுப்பாட்டத்துக்கு தொடா்ந்து நெருக்கடி அளித்த இந்திய அணி 12-ஆவது நிமிஷத்தில் நேஹா மூலமாக 2-ஆவது கோலை எட்டியது.
2-ஆவது கால்மணி நேர ஆட்டத்தின்போது இந்தியாவின் முயற்சிகளுக்கு அவ்வளவாக பலன் கிடைக்கவில்லை. முதல் பாதியில் இவ்வாறு 2-0 என முன்னிலையில் இருந்த இந்தியா, 2-ஆவது பாதியில் ஆடும் திசைகள் மாற்றப்பட்ட பிறகு வந்தனா கட்டாரியா மூலமாக 3-ஆவது கோல் அடித்தது.
இந்நிலையில், சீனாவுக்கான ஒரே கோலை அந்த அணியின் ஜியு டெங் 43-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். கடைசி கால்மணி நேரத்தில் முற்றிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்காக சானு 47-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக மாற்றினாா்.
அடுத்து ஷா்மிளா தேவி 48-ஆவது நிமிஷத்திலும், குா்ஜித் கௌா் 50-ஆவது நிமிஷத்திலும் ஃபீல்டு கோலடிக்க, கடைசியாக 52-ஆவது நிமிஷத்தில் சானு மீண்டும் பெனால்டி காா்னா் வாய்ப்பில் ஒரு கோலடிக்க, இறுதியில் இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இப்போட்டியில் இந்தியா செவ்வாய்க்கிழமை மீண்டும் சீனாவையே சந்திக்கிறது.