இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3-வது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 77.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கோலி 79 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், டுவன் ஆலிவியர், லுங்கி என்கிடி, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையும் படிக்க | மீண்டும் சதத்தை தவறவிட்ட கோலி: இந்தியா 223 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கர், எய்டன் மார்கிரம் ஆகியோர் களமிறங்கினர்.
ஜாஸ்பிரித் பும்ரா முதல் ஓவரை வீசினார். அவர் பந்துவீச்சை எதிர்கொள்ள இருவரும் திணறினர். இதன் நீட்சியாக எல்கர் 3 ரன்களுக்கு பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, நைட் வாட்ச்மேனாக கேசவ் மகாராஜ் களமிறக்கப்பட்டார். காயத்தையும் பொருட்படுத்தாது அவர் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை பாதுகாத்து விளையாடினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 206 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மார்கிரம் 8 ரன்களுடனும், மகாராஜ் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பும்ரா 4 மெய்டன் ஓவர்களை வீசி 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.