143 ரன்கள் முன்னிலை: இந்திய அணியின் சரிவைத் தடுத்து நிறுத்திய ரிஷப் பந்த், கோலி

ரிஷப் பந்த் 51, கோலி 28 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் செவ்வாய் அன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹனுமா விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும் சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். தெ.ஆ. அணியில் மாற்றம் எதுவுமில்லை.  

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 79 ரன்களும் புஜாரா 43 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளும் மார்கோ ஆன்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 76.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 14, புஜாரா 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் ஆரம்பித்தவுடன் இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா 9 ரன்களிலும் ரஹானே 1 ரன்னிலும் பவுன்சர் பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். இருவரும் மீண்டும் ரன்கள் அடிக்காமல் ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். பிறகு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ரிஷப் பந்த். இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார்கள்.

விராட் கோலி நிதானமாக விளையாட, ரிஷப் பந்த் தன்னுடைய வழக்கமான பாணியில் விளையாடினார். 2-வது டெஸ்டில் மோசமான ஷாட்டுக்காக மிகவும் விமர்சிக்கப்பட்ட ரிஷப் பந்த், 58 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எட்டினார். 

இந்திய அணி 3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. ரிஷப் பந்த் 51, கோலி 28 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com