இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகிய விராட் கோலி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தற்போது டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
"அணியை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைப்பதும், இடைவிடாது முயற்சிப்பதும் 7 ஆண்டுகளாகத் தொடர்கின்றன. எனது பணியை முழு நேர்மையுடன் செய்திருக்கிறேன்.
எல்லாமே ஒருநாள் முடிவுக்கு வந்தாக வேண்டும். தற்போது டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான எனது நேரம் வந்துவிட்டது. இந்தப் பயணத்தில் ஏராளமான ஏற்ற, இறக்கங்கள் இருந்துள்ளன. ஆனால் முயற்சியின்மையும், நம்பிக்கையின்மையும் ஒருபோதும் இருந்ததில்லை.
இதையும் படிக்க | கோலி விலகல்: பிசிசிஐ, ஜெய் ஷா ட்வீட்
எந்தவொரு காரியத்திலும் 120 சதவிகிதம் உழைப்பைப்போட வேண்டும் என எப்போதுமே நம்புபவன் நான். அப்படி செய்ய முடியாவிட்டால் அது சரியான செயல் அல்ல என்பது எனக்குத் தெரியும். என் மனதில் நன்கு தெளிவு இருக்கிறது. எனது அணிக்கு என்னால் நேர்மையற்றவனாக இருக்க முடியாது.
நீண்ட காலங்களுக்கு நாட்டை வழிநடத்துவதற்கான வாய்ப்பை வழங்கிய பிசிசிஐ-க்கு நன்றி.
முக்கியமாக, அணி குறித்த எனது கனவை நனவாக்க முதல் நாளிலிருந்து ஒத்துழைத்து எந்தவொரு சூழலிலும் நம்பிக்கை இழந்து பின்வாங்காமல் இருந்த எனது சகவீரர்களுக்கு நன்றி. இந்தப் பயணத்தை நீங்கள்தான் நினைவில்கொள்ளும்படியும் அழகாகவும் மாற்றியுள்ளீர்கள்.
டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ச்சியாக மேல் நோக்கி அழைத்துச் சென்றதன் பின்னணியிலிருந்து செயல்பட்ட ரவி சாஸ்திரி மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தக் கனவை நனவாக்குவதற்கு நீங்கள் மிகப் பெரிய பணியைச் செய்துள்ளீர்கள்."