லக்னெள ஐபிஎல் அணி தேர்வு செய்த மூன்று வீரர்கள்: ரசிகர்கள் ஆச்சர்யம்

ஐபிஎல் அணிகள் பல பிரபலங்களைத் தக்கவைக்காத நிலையில்...
ராகுல்
ராகுல்

ஐபிஎல் போட்டியில் புதிதாகக் களமிறங்கியுள்ள லக்னெள அணி தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாத இறுதிக்கு முன்பு ஏலத்தில் பங்கு பெறும் வீரர்களின் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது. 

லக்னெள அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவரும் ஆலோசகராக கெளதம் கம்பீரும் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் விஜய் தாஹியாவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்கள்.

ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில் ஆகிய வீரர்களை ஆமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆமதாபாத் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா தேர்வாகியுள்ளதாகவும் தெரிகிறது. பாண்டியா, ரஷித் கான் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 15 கோடி சம்பளமும் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 7 கோடி சம்பளமும் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் லக்னெள அணி தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன. கே.எல். ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா), இந்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாய் ஆகிய வீரர்களைத் தேர்வு செய்திருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கே.எல். ராகுலுக்கு ரூ. 15 கோடியும் ஸ்டாய்னிஸுக்கு ரூ. 11 கோடியும் பிஸ்னாய்க்கு ரூ. 4 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது. கேப்டனாக ராகுல் செயல்படவுள்ளார். கடந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக அவர் இருந்தார்.

ஐபிஎல் அணிகள் பல பிரபலங்களைத் தக்கவைக்காத நிலையில் ஸ்டாய்னிஸ், பிஸ்னாயின் தேர்வு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இருவரும் திறமையான வீரர்கள் தாம் என்றாலும் அவர்களை விடவும் ஐபிஎல் போட்டியில் சாதித்த பலரைத் தவிர்த்துவிட்டு இவ்விருவரையும் தேர்வு செய்துள்ளார்கள். மேலும் பஞ்சாப் அணிக்கு இருமுறை கே.எல். ராகுல் தலைமை தாங்கியும் அந்த அணி இருமுறையும் 6-ம் இடமே பிடித்தது. இதனால் ராகுலை புதிய அணிக்கு கேப்டனாக்கியிருப்பதும் துணிச்சலான முடிவாகக் காணப்படுகிறது. ஒரு பேட்டராகக் கடந்த நான்கு வருடங்களிலும் 659, 593, 670, 626 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார் ராகுல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com