ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னௌ நகரத்தை அடிப்படையாகக் கொண்ட அணிக்கு சூப்பர் ஜெயன்ட்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னௌ மற்றும் ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் லக்னௌ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, ஏலத்துக்கு முன்பாக இருஅணிகளும் தேர்வு செய்த வீரர்கள் பட்டியல் கடந்த சனிக்கிழமை வெளியானது.
இதில் லக்னௌ அணி கேஎல் ராகுல் (ரூ. 17 கோடி), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ரூ. 9.2 கோடி) மற்றும் ரவி பிஷ்னாய் (ரூ. 4 கோடி) ஆகியோரைத் தேர்வு செய்துள்ளது.
இந்த நிலையில், சூப்பர் ஜெயன்ட்ஸ் என அணிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஐபிஎல் 2016, 2017 ஆகிய சீசன்களில் பங்கேற்றபோது இந்த நிறுவனம் புனே அணிக்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.