தென் கொரியாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது தங்கப் பதக்கத்தை புதன்கிழமை வென்றது.
10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் மெஹுலி கோஷ்/சாஹு துஷாா் மனே கூட்டணி 17-13 என்ற புள்ளிகள் கணக்கில் ஹங்கேரியின் எஸ்தா் மெஸாரோஸ்/இஸ்த்வன் பென் இணையை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
இதில் சாஹு, சீனியா் பிரிவில் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும். மெஹுலிக்கு இது 2-ஆவது தங்கம். அவா் ஏற்கெனவே 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றிருக்கிறாா்.
இதனிடையே, 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் பாலக்/ஷிவா நா்வால் இணை 16-0 என்ற புள்ளிகளில் மிக எளிதாக கஜகஸ்தானின் இரினா லாக்டியோனோவா/வாலெரி ரகிம்ஸான் கூட்டணியை தோற்கடித்து பதக்கத்தை தனதாக்கியது.
இதையடுத்து, போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா புதன்கிழமை முடிவில் 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தது.