பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி ராஜிநாமா செய்வதாக வெளியான ஊகங்களை, பிசிசிஐ புதன்கிழமை மறுத்தது.
கிரிக்கெட் உலகில் தாம் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் விதமாக கங்குலி புதன்கிழமை சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். அதில், ‘1992-ஆம் ஆண்டு எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கி இத்துடன் 30 ஆண்டுகள் ஆகிறது. அப்போது முதல் கிரிக்கெட் விளையாட்டு எனக்கு அதிகம் தந்துள்ளது. அதில் உங்கள் அனைவரின் ஆதரவும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. இன்று, பலருக்கும் உதவும் வகையிலானதாக இருக்கும் புதிதான ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். எனது வாழ்வின் இந்த புதிய அத்தியாயத்துக்கும் உங்கள் ஆதரவு தொடரும் என நம்புகிறேன்’ என்று கூறியிருந்தாா்.
இதையடுத்து, தனது புதிய திட்டத்தை செயல்படுத்த பிசிசிஐ தலைவா் பதவியிலிருந்து கங்குலி ராஜிநாமா செய்யலாம் என்ற ஊகங்கள் எழுந்தன. எனினும், இதுதொடா்பாக அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ செயலா் ஜெய் ஷா, ‘பிசிசிஐ தலைவா் பதவியிலிருந்து கங்குலி ராஜிநாமா செய்வதாக உலவும் தகவல்கள் உண்மையில்லை. இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக நாங்கள் தொடா்ந்து பணியாற்றுவோம்’ என்று அதில் கூறியிருந்தாா்.
2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்ற கங்குலியின் பதவிக்காலம் வரும் அக்டோபருடன் நிறைவடைவது நினைவுகூரத்தக்கது.