சமீபத்தில் தலைமைப் பொறுப்பை ராஜிநாம செய்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனக்கு தலைமைப் பொறுப்பு சுமையாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து அணி கடந்த 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் ஆஷஸ் 4-0 எனவும், 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணியிடமும் தோல்வியுற்றதும் அடங்கும்.
அதனைத் தொடர்ந்து ஜோ ரூட் ஏப்ரல்-15 ஆம் நாள் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகினார். பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் புதிய கெப்டனாக பொறுப்பேற்றார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து வெற்றி பெற 277 ரன்கள் தேவைப்பட்டது. முக்கியமான இப்போட்டியில் ஜோ ரூட் சதமடித்தார். அது அவரது 26ஆவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அல்லாமல் அவர் 10,000 ரன்களையும் கடந்து சாதனைப் புரிந்தார்.
“கேப்டன்சிக்கும் எனக்கும் சுமூகமான உறவு அமையவில்லை. அது என்னை எவ்வளவு இழுத்துக்கொண்டு போனது என்பதை அறியாமலே இருந்து விட்டேன். அந்த சுமையை நான் ஆடுகளத்திலே விட்டுவிட முடியவில்லை. அது வீடு வரைக்கும் தொடர்ந்து வந்தது. அதனால் குடும்பத்திற்கும், எனக்கும் என்னை சுற்றியுள்ள நெருங்கிய நண்பர்களுக்கும் பாதிப்பைதான் கொடுத்தது.
கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகியது சரியான முடிவாக இருக்கும் என உணர்ந்த உடனே செய்து விட்டேன். எனது தோலில் இருந்த பெரிய சுமையை இறக்கி வைத்தது போல் உணர்கிறேன். நான் இவ்வாறு செய்ததற்கு மிகவும் பெருமையடைகிறேன். எனது சிறந்த நண்பன் பென் ஸ்டோக்ஸ் உடன் பயணிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்வில் புதிய பகுதியின் தொடக்கம் இது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல் அணியாக இன்னும் அதிக வெற்றிகளை குவிக்க விரும்புகிறோம்” என ஜோ ரூட் தெரிவித்தார்.