ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்க்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஹேசல்வுட் ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (2021), ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு (2022) அணிகளுக்காக வெற்றிகரமாக விளையாடி உள்ளார். 2021 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் சிறப்பாக பந்து வீசினார். அதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஜோஸ் ஹேசல்வுட் பற்றி கூறியதாவது:
நான் எப்போதும் அவரை டெஸ்ட் அல்லது ஒருநாள் கிரிக்கெட் பவுலராகவே நினத்தேன். ஏனெனில் டி20யில் அதிகமான மாறுபாடுகள் வேண்டும். ஆனால் சில வருடங்களாக அவர் அபாரமான டி20 பவுலராக உருவாகியுள்ளார். அவர் 2021இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடியது 2021 உலக கோப்பைக்கு முன்பு மிகப்பெரிய நல்வாய்ப்பாக அமைந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த டி20 பவுலர் அவர்தான். இதில் சந்தேகமே இல்லை.
சொந்த மண்ணில் விளையாடும் போது ஹேசல்வுட்க்கு புதியதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. யார்கர், ஸ்லோ பந்து, ஸ்டாக் பந்து ஆகிய அவரது வலுவான யுக்திகளே போதும்.
ஆஸ்திரேலியாவில் பிட்ச் சிறிது ஸ்லோவாக இருக்கும். அதனால் அவரது லென்ந்தில் வீசும் பந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவருக்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் இன்னும் அதிகமான வாய்ப்புகள் வழங்க வேண்டும். அவருடன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் சேரும்போது அணி மிக வலுவாக இருக்கும்.