தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
"கேஎல் ராகுல் இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை. டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் மும்பையில் இன்று கூடுகின்றனர். நள்ளிரவில் இங்கிலாந்து புறப்படுகின்றனர். கேஎல் ராகுல் அணியுடன் பயணிக்கவில்லை. இந்த வார இறுதியில் உடற்தகுதித் தேர்வில் ராகுல் பங்கேற்கவுள்ளார். எனினும், காயத்திலிருந்து மீள அவர் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளவுள்ளார்."
இதையும் படிக்க | அயர்லாந்து டி20 தொடர்: ஹார்திக் பாண்டியா கேப்டன்
2021 டெஸ்ட் தொடரில் தடைபட்ட கடைசி டெஸ்ட் ஆட்டம் ஜூலை 1-ம் தேதி பிர்மிங்காமில் தொடங்குகிறது. ரிஷப் பந்த் தவிர அனைத்து வீரர்களும் வியாழக்கிழமை அதிகாலை இங்கிலாந்து புறப்படுகின்றனர். ஒரேயொரு ஆட்டம் என்பதால் ராகுலுக்கு மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில் களமிறங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. ராகுலுக்குப் பதில் ஜாஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.