இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்துள்ளது.
இந்தப் போட்டி இலங்கையில் உள்ள பிரமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் களமிறங்கினர். டேவிட் வார்னர் 9 ரன்களில் துஷ்மந்தா சமீரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 10 ரன்களிலும், மார்னஸ் 29 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் கேப்டன் ஃபின்ச் உடன் ஜோடி சேர்ந்தார் அலெக்ஸ் கேரி. இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதானமாக ஆடிய அலெக்ஸ் கேரி 49 ரன்களில் ஆட்டமிந்து 1 ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
மறுமுனையில் விளையாடிய கேப்டன் ஃபின்ச் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 85 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 65 பந்துகளை எதிர்கொண்ட அவர் 70 ரன்கள் குவித்தார். மறுமுனையில் அவருடன் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் ஜெஃப்ரி வாண்டர்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இலங்கை அணி சற்று முன் வரை 1 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.