நண்பரின் மரணத்தில் தொடர்பு: இந்திய ஹாக்கி கேப்டன் மீது குற்றச்சாட்டு

தனது மகனின் மரணத்தில் லக்ராவுக்குத் தொடர்பு உள்ளதாக ஆனந்தின் தந்தை பந்தனா தப்போ குற்றம் சாட்டியுள்ளார். 
நண்பரின் மரணத்தில் தொடர்பு: இந்திய ஹாக்கி கேப்டன் மீது குற்றச்சாட்டு

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் 32 வயது பிரேந்திரா லக்ரா தலைமையிலான இந்திய அணி வெண்கலம் வென்றது.

இந்நிலையில் நண்பரின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக பிரேந்திரா லக்ரா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் பிரேந்திரா லக்ராவின் நண்பர் ஆனந்த் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி 28 அன்று ஆனந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகனின் மரணத்தில் பிரேந்திரா லக்ராவுக்குத் தொடர்பு உள்ளதாக ஆனந்தின் தந்தை பந்தனா தப்போ குற்றம் சாட்டியுள்ளார். 

ஊரிலிருந்து வந்த என் மகன் அவருடைய அறையில் இறந்து கிடந்தார். லக்ராவும் ஒரு பெண்ணும் மட்டும் அப்போது அந்த வீட்டில் இருந்தார்கள். எனது மகனின் மரணத்தில் எனக்குச் சந்தேகம் உள்ளது என்று பந்தனா தற்போது பேட்டியளித்துள்ளார்.

எனினும் ஆனந்தின் தந்தை சுமத்திய குற்றச்சாட்டுக்கு பிரேந்திரா லக்ரா இதுவரை பதில் எதுவும் அளிக்கவில்லை. ஆனந்தின் மரணம் குறித்த மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகு தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என இன்ஃபோசிட்டி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவுக்காக 200-க்கும் அதிகமான ஆட்டங்களில் பிரேந்திரா லக்ரா விளையாடியுள்ளார். கடந்த வருடம் இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றபோது லக்ரா அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com