இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில், இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா சதமடித்து அசத்தியுள்ளார். 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் மொஹலி மைதானத்தில் மார்ச் 4 அன்று தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ் போன்றோர் இடம்பிடித்துள்ளார்கள். ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, இந்திய கேப்டனாக அறிமுகமாகும் டெஸ்ட் இது. கோலி விளையாடும் 100-வது டெஸ்ட், இலங்கை டெஸ்ட் அணியின் 300-வது டெஸ்ட் என மொஹலி ஆட்டம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.
முதல் நாள் முடிவில் இந்திய அணி, 85 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. ஜடேஜா 45, அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்றும் இந்திய பேட்டர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்கள். கீழ்நடுவரிசை வீரர்களான ஜடேஜாவும் அஸ்வினும் தங்களது பேட்டிங் திறமையை நன்கு வெளிப்படுத்தினார்கள். 87 பந்துகளில் அரை சதமெடுத்த ஜடேஜா தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 97-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 400 ரன்களை எட்டியது. அழகான 6 பவுண்டரிகள் அடித்த அஸ்வின், 67 பந்துகளில் அரை சதமெடுத்தார். சமீபகாலமாக பேட்டிங்கிலும் அசத்தி வரும் ஜடேஜா, இந்த டெஸ்டில் முதல் பேட்டராக சதமடித்தார். 10 பவுண்டரிகளுடன் 160 பந்துகளில் சதமடித்து இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஜடேஜா சதமடிக்கும் முன்பு 61 ரன்களில் லக்மல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அஸ்வின்.
2-வது நாளின் முதல் பகுதியில் இந்திய அணி 111 ரன்கள் எடுத்துள்ளது. அந்தளவுக்கு ஆதிக்கம் 2-வது நாளிலும் தொடர்கிறது. மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 112 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 102, ஜெயந்த் யாதவ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எப்படியும் 500 ரன்களைப் பெற்றுவிடும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.