ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக ஃபாஃப் டு பிளெஸ்சிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.விராட் கோலி தலைமையில் 2016-ல் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர், ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக அவர் பணியாற்றினார்.
ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் 10 அணிகளில் ஆர்சிபி அணி மட்டுமே கேப்டன் பெயரை அறிவிக்காமல் இருந்தது. கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் விளையாடிய ஃபாஃப் டு பிளெஸ்சிஸ், இந்தமுறை ஆர்சிபி அணிக்குத் தேர்வாகியுள்ளதால் அவருடைய பெயரை கேப்டனாக அறிவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. தினேஷ் கார்த்திக், கோலி ஆகியோரின் பெயர்களையும் ரசிகர்கள் ஊகித்தார்கள்.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக ஃபாஃப் டு பிளெஸ்சிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ஃபாஃப் டு பிளெஸ்சிஸ்ஸை ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்து சென்னை ரசிகர்களை வேதனைப்படுத்தியது ஆர்சிபி அணி. சிஎஸ்கே, புணே அணிகளுக்காக ஐபிஎல் போட்டியில் 100 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் டு பிளெஸ்சிஸ். 22 அரை சதங்களுடன் 2,935 ரன்கள் எடுத்துள்ளார். 2021 போட்டியில் சிஎஸ்கேவில் விளையாடிய டு பிளெஸ்சிஸ், 16 ஆட்டங்களில் 633 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2022 கேப்டன்கள்
சிஎஸ்கே - தோனி
மும்பை - ரோஹித் சர்மா
தில்லி - ரிஷப் பந்த்
கொல்கத்தா - ஷ்ரேயஸ் ஐயர்
ராஜஸ்தான் - சஞ்சு சாம்சன்
சன்ரைசர்ஸ் - கேன் வில்லியம்சன்
பஞ்சாப் - மயங்க் அகர்வால்
லக்னெள - கே.எல். ராகுல்
குஜராத் - ஹார்திக் பாண்டியா
ஆர்சிபி - டு பிளெஸ்சிஸ்
ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது.