முகப்பு விளையாட்டு செய்திகள்
போராடும் இலங்கை பேட்டர்கள்: முதல் பகுதியில் 3 விக்கெட்டுகளை எடுத்த இந்தியா
By DIN | Published On : 14th March 2022 04:24 PM | Last Updated : 14th March 2022 04:26 PM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிரான 2-ம் டெஸ்டில் 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையே மொஹலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. பெங்களூர் டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் நடைபெறும் 3-வது பகலிரவு டெஸ்ட் இது. இதற்கு முன்பு கொல்கத்தா, ஆமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 59.1 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் அற்புதமாக விளையாடி 92 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 35.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 68.5 ஓவர்கள் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. பிரவீன் ஜெயவிக்ரமா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணி வெற்றி பெற 447 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-ம் நாள் முடிவில் இலங்கை அணி 7 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று கருணாரத்னேவும் குசால் மெண்டிஸும் நன்கு விளையாடி ஆரம்பத்தில் சிறிது நேரம் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அணியின் ஸ்கோர் 100-ஐ நெருங்கும் முன்பு குசால் மெண்டிஸ் 54 ரன்களுடன் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். மேத்யூஸை 1 ரன்னில் போல்ட் செய்தார் ஜடேஜா. தனஞ்ஜெயா டி சில்வா 4 ரன்களில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் டேல் ஸ்டெய்னைத் தாண்டிச் சென்றார் அஸ்வின்.
3-ம் நாள் முதல் பகுதியில், தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி, 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. கேப்டன் கருணாரத்னே 67, நிரோஷன் டிக்வெல்லா 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இலங்கை அணியின் கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ள நிலையில் வெற்றிக்கு 296 ரன்கள் தேவைப்படுகின்றன.
3-ம் நாளில் இதுவரை 3 விக்கெட்டுகளை இழந்தாலும் தோல்வியைத் தவிர்க்க அல்லது தள்ளிப்போட இலங்கை அணி நன்குப் போராடி வருகிறது. இதேபோல முதல் இன்னிங்ஸிலும் விளையாடியிருந்தால் இந்த டெஸ்ட் இந்தளவுக்கு இந்தியாவுக்குச் சாதகமாக மாறியிருக்காது.