பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூ பிளெஸ்சி, அனுஜ் ராவத் ஆகியோர் களமிறங்கினர்.
இதையும் படிக்க | டூ பிளெஸ்சி அதிரடி அரைசதம்: பஞ்சாப் அணிக்கு 206 ரன்கள் இலக்கு
ஆரம்ப முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளெஸ்சி 57 பந்துகளில் 88 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. கோலி 41, தினேஷ் கார்த்திக் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மாயங்க் அகர்வாலும், ஷிகர் தவானும் நல்ல தொடக்கம் தந்தனர். மாயங்க் அகர்வால் 32 ரன்கள் எடுத்த நிலையில் சபாஜ் அகமது கேட்சில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 43 ரன்கள் எடுத்த நிலையில் அனுஜ் ராவத் கேட்சில் விக்கெட் ஆனார்.
இதையும் படிக்க | ஸ்விஸ் ஓபன்: இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் தோல்வி
அவர்களைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கிய பானுக ராஜபக்சே அதிரடி காட்டினார். 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசிய அவர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்த பஞ்சாப் அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் சார்பில் ஆடன் ஸ்மித் மற்றும் ஷாருக்கான் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.