மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. இதனால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, போட்டியிலிருந்து வெளியேறியது இந்தியா. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்தியா, 7 ஆட்டங்களில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5-ம் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதியில் ஆடவுள்ளன.
வென்றே தீர வேண்டிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா அதே ஓவர்களில் அதே 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் அடித்து வென்றது. கடைசிப் பந்தில் ஆட்டத்தின் முடிவு எட்டப்பட்டதால் இந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.
இந்திய அணி தோற்றபோது மைதானத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் இந்திய அணியின் தோல்வியை மேற்கிந்தியத் தீவுகளின் வீராங்கனைகள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதையும் காணொளியாக வெளியிட்டுள்ளது ஐசிசி.