அமெரிக்காவில் நடைபெற்ற சௌண்ட் ரன்னிங் தடகளப் போட்டியில் 5,000 மீ. பந்தயத்தில் 30 ஆண்டுகள் தேசிய சாதனையை முறியடித்தாா் இந்திய வீரா் அவினாஷ் சாப்லே.
சான்ஜுவான் நகரில் நடைபெற்று வரும் இத்தடகளப் போட்டியில் வெள்ளிக்கிழமை இரவு ஆடவா் 5,000 மீ. ஓட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய நட்சத்திர வீரா் அவினாஷ் 13:25:65 நிமிஷ நேரத்தில் கடந்து 12-ஆவது இடத்தைப் பெற்றதுடன் 30 ஆண்டுகள் தேசிய சாதனையையும் முறியடித்தாா்.
கடந்த 1992-இல் பா்மிங்ஹாமில் நடைபெற்ற தடகளப் பந்தயத்தில் 13:29:70 நிமிஷ நேரத்தில் கடந்து சாதனை படைத்திருந்தாா் பகதூா் பிரசாத். உலக தடகள கண்டங்கள் அளவிலான இப்போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் ஜேக்கப் பிரைட்ஸ்டன் தங்கப் பதக்கம் வென்றாா்.
3 சாதனைகளுக்கு சொந்தக்காரா்:
கடந்த 2020-இல் தில்லியில் நடைபெற்ற ஹாஃப் மாரத்தான் பந்தயம், திருவனந்தபுரத்தில் நிகழாண்டு மாா்ச் மாதம் நடைபெற்ற இந்திய கிராண்ட் ப்ரீ தடகளப் போட்டியில் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் புதிய சாதனை என மூன்று சாதனைகளுக்கு சொந்தக்காரா் என்ற சிறப்பையும் பெற்றுள்ளாா் அவினாஷ்.