செஸ் இறுதிச்சுற்று: நூலிழையில் தோற்ற பிரக்ஞானந்தா

போட்டியில் 2-ம் இடம் பெற்ற பிரக்ஞானந்தாவுக்குப் பரிசுத்தொகையாக ரூ. 16.50 லட்சம் கிடைத்தது.
செஸ் இறுதிச்சுற்று: நூலிழையில் தோற்ற பிரக்ஞானந்தா

இரு நாள்களாக நடைபெற்ற செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் நூலிழையில் சீன வீரரிடம் தோற்று இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி வாய்ப்பை இழந்தார். 

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் அரையிறுதியில் நெதர்லாந்தைச் சேர்ந்த உலகின் நெ.10 வீரர் அனிஷ் கிரியைத் தோற்கடித்தார் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.  அதற்கு முன்பு உலக சாம்பியன் கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இறுதிச்சுற்றில் சீனாவைச் சேர்ந்த உலகின் நெ.2 வீரர் டிங் லிரினுடன் மோதினார். முதல் நாளன்று காலையில் 11-ம் வகுப்புத் தேர்வை முடித்துக்கொண்டு இரவில் இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா கலந்துகொண்டார். முதல் நாளில் 2.51.5 என சீன வீரர் வென்று முன்னிலை பெற்றார்.

29 வயது டிங் லிரினுடனான 2-ம் நாள் ஆட்டத்தில் முதல் ஆட்டத்தை டிரா செய்த பிரக்ஞானந்தா, 2-ம் ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். 3-வது ஆட்டத்தை டிரா செய்தார். இறுதிச்சுற்றின் 2-ம் பகுதியை பிரக்ஞானந்தா வென்று 1-1 என சமன் ஆக்கினார். இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க டை பிரேக் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இரு பிளிட்ஸ் ஆட்டங்கள் நடைபெற்றன. 

முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தவறு செய்ததால் ஆட்டம் டிரா ஆனது. அடுத்த ஆட்டத்தில் அவர் செய்த மற்றொரு தவறால் தோல்வியடைய நேர்ந்தது. இதனால் டை பிரேக் முறையில் செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியை சீன வீரர் டிங் லிரின் வென்றார். இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் பிரக்ஞானந்தா அதைத் தவறவிட்டுவிட்டார். இல்லாவிட்டால் போட்டியை வென்று செஸ் உலகை வியக்க வைத்திருப்பார். 

போட்டியில் 2-ம் இடம் பெற்ற பிரக்ஞானந்தாவுக்குப் பரிசுத்தொகையாக ரூ. 16.50 லட்சம் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com