மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சூப்பர்நோவாஸ் சாதனைப் படைத்தது.
முதலில் பேட்டிங் செய்த சூப்பர்நோவாஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 165 ரன்களை எடுத்தது. இதில் டோட்டின் 62 ரன்களும், ஹர்மன்ப்ரீத் 43 ரன்களும், பிரியா புனியா 28 ரன்களும் எடுத்தனர். வெலாசிட்டி அணியில் கேட், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
அடுத்து பேட்டிங் ஆடிய வெலாசிட்டி அணியில் ஷெபாலி வர்மா 15 ரன்களுக்கும், பாட்டியா 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கிரன் 13 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. லாரா வொல்வார்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 65 ரன்களை எடுத்தார். சிம்ரன் பஹதூர் 10பந்துகளில் 20 ரன்களுடனும் கடைசி வரை போராடியும் வெற்றிப் பெற முடியவில்லை.
இந்த வெற்றியோடு சூப்பர்நோவாஸ் 3வது முறையாக மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2018, 2019 ஆம் ஆண்டும் சூப்பர்நோவாஸ் கோப்பையை வென்றது.