ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் கொரியாவுக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் சூப்பர் 4 பிரிவில் கொரியா மற்றும் மலேசியா கோல் கணக்கில் முன்னிலையில் இருந்ததால், இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணி கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த ஆட்டத்தில் கடைசி விசில் வரை இந்திய வீரர்கள் கடுமையானப் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிக்க | நான் வேற மாதிரி : சஞ்சு சாம்சன்
இந்திய அணிக்காக நிலாம் சஞ்சீப் 9-வது நிமிடத்திலும், மனிந்தர் சிங் 21-வது நிமிடத்திலும், ஷேஷே கௌடா 37-வது நிமிடத்திலும், மாரீஸ்வரன் சக்திவேல் 37-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கொரியா அணி 13, 18, 28 மற்றும் 44 ஆகிய நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தது.
4-4 என்ற கோல் கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் இருக்க, கடைசி நேரத்தில் கோல் அடிப்பதற்கு இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. வட்டத்துக்கு உள் இருந்து உத்தம் சிங்குக்கு பந்தை அனுப்பினார் பவன் ராஜ்பர். ஆனால், இந்திய வீரர்களால் அதைக் கையாள முடியவில்லை.
இறுதியில் ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. எனினும், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் நாளை (புதன்கிழமை) ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா.