ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தை 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி.
முதல் ஆட்டத்தில் நமீபியாவுடன் தோற்ற இலங்கை அணி, 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றதால் முதல் வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் இருந்தன. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
14-வது ஓவர் வரை பெரிய பாதிப்பில்லாமல் பேட்டிங் செய்தது இலங்கை. 14-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. 15-வது ஓவரில் மறக்க முடியாத ஓவரை வீசினார் ஐக்கிய அரபு அமீரக அணியில் விளையாடும் தமிழரான கார்த்திக் மெய்யப்பன்.
இந்த ஆட்டத்தின் 15-வது ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பனுகா, அசலங்கா, தசுன் ஷனகா என மூன்று முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து சாதனை செய்தார் கார்த்திக் மெய்யப்பன். 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2000-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கார்த்திக் பழனியப்பன் மெய்யப்பன். 2012 முதல் துபையில் வசித்து வருகிறார். ஐபிஎல் போட்டிக்காக ஆர்சிபி அணியுடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். தற்போது இலங்கை அணிக்கு எதிராக விளையாடி ஹாட்ரிக் எடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
தொடக்க வீரர் பதும் நிசங்கா மட்டும் கவனமாக விளையாடி இலங்கை அணிக்குக் கெளரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்தார். 60 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்திலும் தோல்வியடைந்தால் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய நிலையில் அபாரமாகத் திறமையை வெளிப்படுத்தினார்கள் இலங்கைப் பந்துவீச்சாளர்கள்.
3-வது ஓவரிலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் ஐக்கிய அரபு அமீரகத்தால் இலக்கை நெருங்க முடியாமல் போனது. ஒரு பேட்டராலும் 20 ரன்களை எடுக்க முடியாததால் 17.1 ஓவர்களில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்து இலங்கைக்குப் பெரிய வெற்றியை அளித்தார்கள். 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.