ஆசியக் கோப்பையில் அதிரடியாக சதமடித்த விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
என்னைவிட திறமை வாய்ந்த வீரர் விராட் கோலி தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 1020 நாட்களுக்குப் பிறகு சர்வதேசப் போட்டியில் சதமடித்து அசத்தினார். இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: குஜராத் மாற்றத்தை விரும்புகிறது: அரவிந்த் கேஜரிவால்
விராட் கோலி குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கூறியதாவது: “ நாங்கள் இருவரும் இந்திய அணியின் கேப்டன்களாக ஆக்ரோஷமான ஆட்டத்தினை களத்தில் வெளிப்படுத்தியிருக்கிறோம். திறமையைப் பொறுத்தவரை என்னைவிட விராட் கோலி மிகவும் திறமையானவர். ஆனால், அணியினை வழிநடத்தும் விதத்தில் எங்கள் இருவரையும் ஒப்பிட முடியாது என நான் நினைக்கிறேன்.
நாங்கள் இருவரும் வெவ்வேறு தலைமுறை கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடியுள்ளோம். நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடியுள்ளோம். அவர் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் மிகவும் கடினமாக மாறியுள்ளது. கரோனா பேராபத்து மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் என பல கடினங்களை வீரர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.” என்றார்.
ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.