துலீப் கோப்பை அரையிறுதியில் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
சேலத்தில் தெற்கு மண்டலம் - வடக்கு மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் கோப்பை அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டல அணி 8 விக்கெட் இழப்புக்கு 630 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரோஹன் குன்னும்மல் 143 ரன்களும் கேப்டன் ஹனுமா விஹாரி 134 ரன்களும் பாபா இந்திரஜித் 65 ரன்களும் ரிக்கி புய் ஆட்டமிழக்காமல் 103 ரன்களும் எடுத்தார்கள். வடக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 67 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் அபாரமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தெற்கு மண்டல அணி 3-ம் நாள் முடிவில் 28 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி 580 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளையுடன் ஆட்டம் முடிவடைகிறது.