அதிரடியால் திணறடித்த சூர்யகுமார்: இலங்கைக்கு 229 ரன்கள் இலக்கு

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடியால் இந்திய அணி ரன்கள் குவித்துள்ளது.
அதிரடியால் திணறடித்த சூர்யகுமார்: இலங்கைக்கு 229 ரன்கள் இலக்கு

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடியால் இந்திய அணி 228 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜனவரி 7) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 

அதன்பின், சுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்தார் ராகுல் திரிபாதி. இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாட இந்திய அணியின் ரன் ரேட் 10 என்ற நிலையிலேயேத் தொடர்ந்தது. இருப்பினும், அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி 16 பந்துகளில் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்ய குமார், சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார்.

அவர் வந்த வேகத்திலேயே அதிரடி காட்டினார். தனது வழக்கமான அசாத்திய பேட்டிங் திறமையால் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்த வண்ணமே இருந்தது. மறுமுனையில் சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 

தொடர்ந்து சிறிது நேர இடைவெளியில் இரு விக்கெட்டுகளை இழந்தபோதிலும் சூர்யகுமாரின் அதிரடி குறையவில்லை. அவர் மைதானத்தில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். சிறப்பாக விளையாடிய அவர் 45 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.  இந்த சதம் டி20 போட்டிகளில் அவர் அடித்த 3-வது சதமாகும். டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். 4 சதங்களுடன் அந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடத்தில் உள்ளார்.

ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் சூர்யகுமார் ருத்ர தாண்டவம் ஆடினார். கடைசி வரை அதிரடியாக ஆடிய சூர்ய குமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.

20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்குகிறது இலங்கை அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com