நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
நியூசிலாந்து அணியை முதல் ஒருநாள் ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. 149 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் எடுத்தார் தொடக்க வீரர் ஷுப்மன் கில். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த இளம் வீரர் (23 வயது) என்கிற சாதனையைப் படைத்தார். இரட்டைச் சதம் எடுத்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் அடைந்தார் கில்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. 50 ஓவர்களை வீசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்கள் குறைவாக வீசியதால் இந்திய அணி வீரர்களின் ஆட்ட ஊதியத்தில் 60% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் குறைவாக வீசினாலே 20% அபராதம் விதிக்கப்படும்.
நாளை (ஜனவரி 21), ராய்பூரில் 2-வது ஒருநாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.