டி20 உலகக் கோப்பையில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் ஓமன், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் கேப்டன் மஹமதுல்லா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது நயின் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். தாஸ் 6 ரன்களுக்கும், அடுத்து வந்த மெஹதி ஹாசன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு, நயிமுடன் ஷகிப் அல் ஹசன் இணைந்தார். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்து சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தது.
29 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்த ஷகிப் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். முகமது நயிம் அரைசதம் கடந்து 50 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறினர். இவர்களைத் தவிர்த்து கேப்டன் மஹமதுல்லா 17 ரன்கள் எடுத்தார். வேறு எவரும் 10 ரன்களைக்கூட தாண்டவில்லை.
இதனால், வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஓமன் தரப்பில் பிலால் கான் மற்றும் ஃபயாஸ் பட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கலீமுல்லா 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ஸீஷன் மக்சூத் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.