ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் விளாசியுள்ளது.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அந்த அணிக்கு இம்முறையும் ஹஸ்ரதுல்லா ஸஸாய் மற்றும் முகமது ஷசாத் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். பவர் பிளேவுக்குள் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் ரன் சேர்த்த நிலையில் ஷசாத் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ஸஸாய் சிறப்பான சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மிரட்டல் காட்டினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் நஜிபுல்லா ஸத்ரான் இணை அட்டகாசமான பாட்னர்ஷிப் அமைத்தது. பெரும்பாலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டே ரன் ரேட்டை உயர்த்தியது இந்த இணை.
குர்பாஸும் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனினும் ஸத்ரான் இறுதி வரை அதிரடி காட்டி ஆப்கானிஸ்தான் ஸ்கோரை உயர்த்தினார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த ஸத்ரான் 34 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.
ஸ்காட்லாந்து தரப்பில் சஃப்யான் ஷரிஃப் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் டேவி மற்றும் மார்க் வியாத் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.