புதுச்சேரி, பிப்.11: உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கொள்முதல் செலவை தமிழகம் குறைக்க இயலும். இதுகுறித்துப் பேசுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன் என்று மத்திய உணவுத் துறை இணை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்தார்.
புதுச்சேரியில் நடைபெற்ற, சமுதாய உள்கட்டமைப்பு குறித்த அகில இந்திய பத்திரிகை ஆசிரியர்களின் இரு நாள் கருத்தரங்கில் சனிக்கிழமை கலந்து கொண்டபோது இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியது:
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்துவது பற்றி சில மாநிலங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. தமிழகத்தைப் பொருத்த வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேறுபட்ட விலையில் அரிசி வழங்க நேரிடும் என்பதால் தமிழகம் தயங்குவதாகத் தெரிகிறது.
ஆனால் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தினால் இந்த மாநிலத்துக்கு சாதகமாகவே இருக்கும். இதனால் தமிழகத்துக்கு செலவு மிச்சமாகும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உதாரணமாக, இப்போது மத்தியிலிருந்து 5 முதல் 6 ரூபாய்க்குப் பெற்று இலவசமாக அவர்கள் வழங்கும் அரிசியை, உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 ரூபாய்க்குப் பெறுவதன் மூலம் தமிழகம் செலவைக் குறைக்க இயலும்.
இது குறித்து ஏற்கெனவே மாநில அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரை நேரில் சந்தித்து இந்த விஷயம் குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.