தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக, பிப்ரவரி 28 ஆம் தேதி அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மீது, தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக, திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் பிப்ரவரி 7 ஆம் தேதி விஜயகாந்த் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும், என மாவட்ட முதன்மை நீதிபதி வி. பாலசுந்தரகுமார் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், முதன்மை நீதிபதி விடுமுறையில் சென்று விட்டதால், இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிபதி பி. முருகாம்பாள் முன்னிலையில், வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
விஜயகாந்த் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடப்பதால், அவரால் நேரில் ஆஜராக இயலவில்லை என நீதிபதியிடம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிப்ரவரி 28 ஆம் தேதி விஜயகாந்த் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.