மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை மீது ஐ.நா. கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறினார்.
இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: இலங்கை அதிபர் ராஜபட்ச வருகை தொடர்பாக, திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இது அவர்களது உரிமை. அதிபர் ராஜபட்ச, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம் வந்தபோதே இந்த போராட்டங்கள் தொடங்கிவிட்டன.
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரின்போது, அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா. குழு இலங்கை சென்று பார்வையிட்டு, நல்லெண்ண அறிவிப்புகளை நிறைவேற்றக் கூறியிருந்தனர். ஆனால், அதை ராஜபட்ச அரசு புறக்கணித்து விட்டது.
இந்தியா அண்டை நாடுகளோடு நட்புறவோடு இருப்பது நல்லதுதான். ஆனால், எந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், அதைக் கண்டிக்க இந்தியா தவறாது.
வரும் ஐ.நா. கூட்டத்தில் இப்பிரச்னையை இந்தியா எழுப்பும். இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்.
மேலும் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என்று ராஜபட்ச திட்டவட்டமாகக் கூறியதை ஏற்க முடியாது.
கடந்த 1987-ம் ஆண்டு ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தன இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என ராஜபட்சவை வலியுறுத்துவோம்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதை இலங்கை அரசு நிறைவேற்றத்தவறினால், இதுதொடர்பாகவும் ஐ.நா. சபையில் பேசுவோம் என்றார் அவர்.