பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சென்ற பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பாஜக தலைவர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரை, கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்வதாக இருந்தது.
அப்போது திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் இருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் தலைமறைவாக இருக்கும் பக்ருதீன், பிலால் மாலிக், முகமது ஹனீபா உள்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.