சென்னை சென்ட்ரல் - பழனி இடையிலான புதிய ரயில் சேவை அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பழனி - சென்னை சென்ட்ரல் இடையிலான அறிமுக சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அறிமுக சிறப்பு ரயில் எண் 06002: அக்.1-ஆம் தேதி பழனியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ் தினசரி சேவை ரயில் எண் 16001/16002: சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி இரவு 9 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு பழனி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலில் ஒரு ஏசி 2-ஆம் வகுப்பு, ஒரு ஏசி 3-ஆம் வகுப்பு, 7 முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட பெட்டியும், 6 சாதாரண வகுப்பு பெட்டியும், 2 சரக்கு பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, குடியாத்தம், ஜோலார்பேட்டை, சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், அக்கரைபட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரபட்டி நிலையங்களில் நின்று செல்லும். இந்த புதிய ரயிலின் முன்பதிவு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்துக்கான இந்த புதிய ரயில் குறித்த அறிவிப்பு 2013-2014-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.