அதிமுக ஆட்சியின் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதில்லை
By dn | Published on : 19th March 2014 03:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அது அறிவிப்போடு சரி, நடைமுறைக்கு வருவதில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
காஞ்சிபுரம் (தனி) தொகுதி வேட்பாளராக திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியது:
1996-ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சியில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை புது பொலிவுடன் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.
மாமல்லபுரம், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ரூ.908 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது.
இதேபோல் மாமல்லபுரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது.
திமுக ஆட்சியில் கருணாநிதியால், மாமல்லபுரத்தில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் பல திட்ட பணிகள் செய்யப்பட்டன.
ஆனால் ஜெயலலிதா மக்கள் நலன் மீது அக்கறை கொள்ளாமல் அடிக்கடி கொடநாடு சென்று ஓய்வு எடுத்து வருகிறார் என்றார் ஸ்டாலின்.
பிரசாரக் கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலர் தா.மோ.அன்பரசன், மாமல்லபுரம் நகரச் செயலர் விஸ்வநாதன், மாமல்லபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பொ.தேவேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாவட்ட துணைச் செயலர் சிறுத்தை வீ.கிட்டு, மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலர் பாரூக்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரசாரக் கூட்டத்தில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சிலர், திமுக கொடியை கையில் ஏந்தியும், துண்டை கழுத்தில் அணிந்திருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அவர்களை மு.க.ஸ்டாலின் கவனித்தார்.