பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானார்.
தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராஜம் கிருஷ்ணன், திருச்சி மாவட்டம், முசிறியில் கடந்த 1924 -ஆம் ஆண்டு பிறந்தார். தமிழில் கள ஆய்வு எழுத்தாளர் எனப் பெயர் பெற்ற இவர், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 40 நாவல்களை எழுதி உள்ளார். "வேருக்கு நீர்', "கரிப்பு மணிகள்', "குறிஞ்சி தேன்', "அலைவாய் கரையில்' போன்ற நாவல்கள் ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். பாரதியார், டாக்டர் ரங்காச்சாரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் ராஜம் கிருஷ்ணன் நூல் எழுதியுள்ளார்.
"சாகித்ய அகாதெமி', "சரஸ்வதி சம்மான்', "பாரதிய பாஷா பரிஷத்' உள்ளிட்ட உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.