கலையும், கைத் தொழிலும் கட்டாயப் பாடமாக வேண்டும்: கவிஞர் வைரமுத்து

பள்ளிகளில் கலையும், கைத் தொழிலும் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
கலையும், கைத் தொழிலும் கட்டாயப் பாடமாக வேண்டும்: கவிஞர் வைரமுத்து

பள்ளிகளில் கலையும், கைத் தொழிலும் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
 சென்னை ராஜ அண்ணாமலை மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பண்இசைப் பேரறிஞர் விருதை எஸ். முத்துக்குமாரசாமி தேசிகருக்கும், இசைப் பேரறிஞர் விருதை தவில் கலைஞர் ஏ.கே. பழனிவேலுக்கும் வழங்கி கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
 73 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப்பட்ட தமிழிசைச் சங்கத்தின் பெருமையைப் புதிய தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழின் விழுமியங்கள் விளங்கும்.
 தமிழிசையை மீட்டெடுக்கும் பெரும்பணியை ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் ஆற்றினார். தமிழிசை என்று ஒன்று இருக்கிறதா? தமிழில் பாடுவதற்கு என்ன உள்ளது? என்று கேட்ட கேள்விக்கு தமிழிசைச் சங்கம் வரலாற்று அடிப்படையில் பதில் சொன்னது.
 சுரங்கள் ஏழும் வடமொழி சார்ந்ததல்ல. தமிழுக்கென்று தனிப்பண்கள் இருந்தன. குரல் - துத்தம் - கைக்கிளை - உழை - இளி - விளரி - தாரம் என்ற தமிழ்ப்பண்களே சரிகமபதநிஸ என்று பின்னாளில் சொல்லப்பட்டன. குழல் - யாழ் - முழவு என்ற இசைக்கருவிகளே தனித் தமிழ்க் கருவிகள் என்பதற்கு அந்தச் சொற்களில் ஆளப்படும் ழகரமே சாட்சி.
 உடுக்கையில் உள்ள தோல் மாட்டுப் பெருங்குடல் சவ்வால் செய்யப்பட்டது. ஆதித்தமிழன்தான் அந்தக் கருவியைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். தமிழிசை என்பது மேட்டுக்குடிக்கு மட்டும் ஆனதல்ல. ஆராய்ச்சியாளர்களுக்கும் வித்தகர்களுக்கும் மட்டும் உரியதல்ல. உழைக்கும் மக்களைச் சாராத எதுவும் நிலைபெறுவதில்லை. இதைத்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பே "பஞ்சமம் என்பதும் சட்ஜமம்' என்பதும் "பஞ்சப் பரம்பரைக்கு அப்பறந்தான்' என்று சிந்து பைரவியில் எழுதினேன்.
 இன்று இசைப்பேரறிஞர் விருதுபெறும் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் தவிலில் இசை வாசிக்கிறவர் அல்ல, தவிலில் தமிழ் வாசிக்கிறவர். பண் இசைப்பேரறிஞர் விருதுபெறும் வேதாரண்யம் சு.முத்துக்குமாரசாமி தேசிகர் உலகமெல்லாம் தேவாரம் ஓதுகிறவர். நூற்றுக்கணக்கான ஓதுவார்களை உருவாக்கியிருப்பவர். ஓதுவார்கள் மட்டும் இல்லையென்றால் தமிழ் 7ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டுக்குப் பயணப்பட்டிருக்காது. இரண்டு அறிஞர்களுக்கும் வாழ்த்துகள்.
 சமூக வலைதளங்களில் உலவும் கணிப்பொறித் தலைமுறை நம் பாரம்பரியப் பெருமைகளையும், கலை மதிப்புகளையும் கண்டறிய வேண்டும். அப்போதுதான் புதிய நூற்றாண்டுகளில் நாம் பெருமிதத்தோடு முன்னேற முடியும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு கலையும் ஒரு கைத்தொழிலும் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்றார் வைரமுத்து.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com