குடந்தை சாரங்கபாணி கோயிலில் கும்பாபிஷேகம்
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
108 வைணவத் தலங்களில் மூன்றாவது சிறப்பு வாய்ந்த திவ்ய தேசமாக ஸ்ரீசாரங்கபாணி கோயில் திகழ்கிறது. ஏழு ஆழ்வார்களால் பாடல்பெற்ற இக்கோயிலில் கடந்த 1999-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி மகாமகத்தையொட்டி, இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி பாலஸ்தாபனம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜகோபுரங்கள், அனைத்து விமானங்கள், சன்னதிகள் ஆகியவை ரூ. 2.50 கோடியில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த 9ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து ஆறுகால யாகசாலை பூஜைகள் 100 பட்டாச்சாரியர்களால் நடத்தப்பட்டு திங்கள்கிழமை காலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் ஸ்ரீஅஹோபில மடத்தின் 46வது அழகிய சிங்கர் சுவாமிகளான ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரெங்கநாத யதீந்திர மஹாதேசிகன் சுவாமிகள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்த பக்தர்கள் கும்பகோணத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்களும் காணும் வகையிலான வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.