நாகப்பட்டினம் அருகே அய்யனார் கோயிலில் வைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிலை வெள்ளிக்கிழமை இரவு அகற்றப்பட்டது.
நாகப்பட்டினம், தெற்கு பொய்கைநல்லூர், கீழத் தெருவில் 80 குடும்பங்களுக்கு சொந்தமான சேஷராய அய்யனார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கோயில் முன்புறம் யானை ஒன்றும், இரண்டு குதிரை சிலைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு குதிரையின் அருகே காவல் வீரன் சிலையும், மற்றொன்றின் அருகே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சிலையும் அமைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, கோயில் கும்பாபிஷேகம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை கோயில் முகப்பில் இருந்த பிரபாகரன் சிலை அகற்றப்பட்டிருந்தது. மேலும், சிலை இருந்த இடத்தில் சிமென்ட் பூசப்பட்டிருந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, போலீஸார் வந்து சிலையை அகற்றியதாக கூறினர். ஆனால், போலீஸ் தரப்பில், கிராம மக்களே பிரபாகரன் சிலையை அகற்றியதாக தெரிவித்தனர். இதனால், சிலையை அகற்றியதில் உள்ள மர்மம் நீடிக்கிறது.